எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. அதில் திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
காலை 10 மணியளவில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்தும், அதிமுக கட்சி விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியதாக எம்எல்ஏ ஒருவர் தெரிவித்தார். நாளையும் சில மாவட்டங்களின் எம்எல்ஏக்களை முதல்வர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, முதல்வரை மாற்ற கோரி மனுவை அளித்துள்ளனர். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடியரசுத்தலைவரை சந்திகவுள்ளதாகவும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியிருந்தனர். எதிர்கட்சியான திமுக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுபோன்ற சிக்கலான அரசியல் சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒற்றுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.