டிரெண்டிங்

கார் ஓட்டும்போது பாலியல் உறவு கொள்வதா? - டிரைவருக்கு ஷாக் கொடுத்த ஆஸி., போலீஸ்!

JananiGovindhan

போக்குவரத்து விதிகளை மீறுவோர் உடனுக்குடன் தண்டிக்கப்படுவதும் அபராதம் விதிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் தற்போது புதிய மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்தியிருக்கிறது.

ஆனால் இந்தியாவை காட்டிலும் பெரும்பாலான வெளிநாடுகளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது குறைவாகவே இருக்கும். ஏனெனில் அங்கெல்லாம் விதிகளை மீறினால் ஜெயில் தண்டனையே வழங்கப்படும் அளவுக்கு சட்டம் இருப்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிமீறல்கள் அரங்கேறுவதுண்டு.

இப்படி இருக்கையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் காரில் சென்ற நபர் தன்னுடன் வந்த பெண் பயணியுடன் பாலியல் உறவு கொண்டதாகவும், சீட் பெல்ட் அணியாததாகவும் குறிப்பிட்டு அந்த நபருக்கு போலீசார் அபராதம் விதித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக The Sun இணையதளத்தில், கார் ஓட்டிக் கொண்டிருந்தபோது டிரைவர் தனது பெண் பயணியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு குறித்து சிசிடிவியில் பதிவானதைக் கண்டு போலீசார் 600 பவுண்ட், அதாவது இந்திய மதிப்பில் 57 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இது பதிவாகியிருக்கிறது. இதுகுறித்த புகைப்படம் Phone and Seatbelt Detection Camera Locations Queensland என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டிருக்கிறது.

அந்த பதிவில், பெரும்பாலான நெட்டிசன்களும் “அந்த பெண் கார் ஓட்டுபவரின் காலில் படுத்துத்தூங்குவது போலவே இருக்கிறது” என்றும், “கண்டிப்பாக அந்த பெண் தூங்கவே செய்திருக்க வேண்டும்.” என்றுமே பதிவிட்டிருக்கிறார்கள்.

ஆனால் இது தொடர்பாக பேசியுள்ள குயின்ஸ்லேண்ட் போக்குவரத்துத்துறையின் செய்தி தொடர்பாளர், “கார் ஓட்டும்போது இப்படியெல்லாம் செய்வது ஆபத்தானது. இது மரணத்தையோ அல்லது பெரும் விபத்தை ஏற்படுத்தவும் கூடும்” என காட்டமாக கூறியிருக்கிறார் என The Sun- செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக சிட்னி நகரில் ஷாப்பிங் வளாகத்தின் வெளியே பட்டப்பகலில் காதல் ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.