டிரெண்டிங்

போராடும் மாணவர்களை தாக்குவது மனித உரிமை மீறல்: ஜி.ராமகிருஷ்ணன்

போராடும் மாணவர்களை தாக்குவது மனித உரிமை மீறல்: ஜி.ராமகிருஷ்ணன்

webteam

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மனித உரிமை மீறல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழக அரசை கண்டித்தும் நீட் தேர்வை எதிர்த்து கைதான மாணவர்களை உடனே விடுதலை செய்யக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி புதுப்பேட்டை சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய மாணவர் சங்கத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இதன்பிறகு புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், ”நீட் தேர்வை நிரத்தரமாக தடை செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தாக்கி உள்ளனர். பள்ளி மாணவிகளை தொடக்கூடாத இடத்தை தொட்டுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மனித உரிமை மீறல் என கூறினார். நீட் விலக்கோரி மத்திய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறிய அவர், அதிமுகவில் 3 அணிகளாக இருந்து 2 அணியாகி உள்ளது.

பதவிக்காக சண்டை நடக்கிறது. இதனை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. பாஜகவின் பேச்சை கேட்டு ஆளுநர் நடந்து கொண்டிருக்கிறார். எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் காலம் கடத்தாமல் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.