டிரெண்டிங்

மூடிக்கிடந்த ஏடிஎம் : கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம ஆசாமிகள்..!

webteam

கன்னியாகுமரியில் 3 மாதங்களாக மூடிக்கிடந்த ஏடிஎம் மையத்திற்கு மர்ம ஆசாமிகள் மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சியஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தை மேக்காமண்டபம், வேர்கிளம்பி, மாறகோணம், கைசாலவிளை, மணலிக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே இந்த ஏ.டி.எம் சேவை மையம் பூட்டப்பட்டது.

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாகவே ஏடிஎம் மையம் செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பல கிலோ மீட்டர் பயணித்து தக்கலை, அழகிய மண்டபம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பணம் எடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமுடக்கத்தால் பொதுப் போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளதால், ஏடிஎம் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இந்தியன் ஓவர்சியஸ் வங்கிக் கிளை மேலாளருக்கு மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.

இதில் எந்தப் பலனும் இல்லாத நிலையில், செயல்படாமல் பூட்டி கிடந்த இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏடிஎம் சேவை மையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், ஏடிஎம் இயந்திரத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். காலையில் இதைக்கண்ட மக்கள் பரவலாக பேசத்தொடங்கியுள்ளனர். அத்துடன் ஏடிஎம் மையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.