டிரெண்டிங்

மதுபோதையில் காவல் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்த நபர்கள்.. போலீஸ் விசாரணை

kaleelrahman

பணி முடிந்து வீடு திரும்பிய உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்த மதுபோதை ஆசாமிகள்... மது குடித்ததை தட்டிக் கேட்டதால் நடந்த வெறிச்செயல். 

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கபாதை அருகே நேற்றிரவு பரங்கிமலை காவல்நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் பணிமுடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுரங்க பாதையின் பக்கவாட்டின் வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றிருக்கிறார். அங்கு உள்ள திண்ணை போன்ற பகுதியில் அமர்ந்து 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

பொது இடத்தில் மது அருந்தியவர்களை உதவி ஆய்வாளர் இங்கு மது அருந்தக்கூடாது என கூறியுள்ளார். அதற்கு போதை ஆசாமிகள் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. தான் ஒரு எஸ்.ஐ என மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். அதற்கு ‘என்னடா எஸ்.ஐ’ எனக்கூறி ஹெல்மெட்டால் தலையில் அடித்துள்ளனர்.

இதில் உதவி ஆய்வாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 10 தையல் போடப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கஞ்சா மற்றும் குடிபோதை ஆசாமிகளை தேடிவருகின்றனர்.