டிரெண்டிங்

மணல் கடத்தலுக்கு உதவியாக நெல்லையில் மேலும் ஒரு காவலர் சஸ்பெண்ட்!

JustinDurai

மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக காவல் உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து நெல்லை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனின் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் திருட்டிற்கு உடந்தையாக காவல்துறை அதிகாரிகள் யாரும் செயல்பட்டால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. மணிவண்ணன் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு வந்ததால், அவரை பணியிடை நீக்கம் செய்யுமாறு நெல்லை சரக காவல் துணை தலைவர் பிரவீன்குமார் அபிநபுவிற்கு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் நேற்று உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம்  மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் லட்சுமி நாராயணன் என்பவரும் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.