மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரம் தொடர்பாக சிவசேனாவுக்கு பாஜக நம்பிக்கை துரோகம் எதுவும் செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால், தேவேந்திர பட்னாவிஸ் தான் முதலமைச்சர் என தேர்தலுக்கு முன்கூட்டியே கூறியதாகத் தெரிவித்தார். அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறிய அமித் ஷா, தற்போது சிவசேனா கட்சி புதிய நிபந்தனைகளுடன் வந்ததால் தங்களால் அதனை ஏற்க முடியவில்லை என்றார்.
ஆட்சி அமைக்க ஆளுநர் வாய்ப்பு அளிக்கவில்லை என சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கூறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். போதிய எண்ணிக்கை இருந்தால், ஆளுநரிடம் அதற்கான கடிதத்தை அளித்து யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம் என்றும் அமித் ஷா கூறினார்.