டிரெண்டிங்

பிரசவத்தில் இளம்பெண் உயிரிழப்பு; மருத்துவமனை மீது உறவினர்கள் கல்வீசி தாக்குதல்!

JustinDurai

கன்னியாகுமரியில் பிரசவத்தின்போது இளம்பெண் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.    

கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். அவரது மனைவி பவித்ரா (26). நிறைமாத கர்ப்பிணியான பவித்ரா கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் பவித்ராவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கன்னியாகுமரி அருகே உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போதிய வசதி இல்லை என்று கூறி அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்று கூறினார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், கொட்டாரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடால் தான் அவர் இறந்தார் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

கன்னியாகுமரி எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். சம்பவம் குறித்து பவித்ராவின் தந்தை முருகன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜான் பிரிட்டோ மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவரை அங்கு நின்ற போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அதிகாரியை அனுப்பி வைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கியதில் காரணமாக மருத்துவமனை முன்பகுதியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்தன.

மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என டிஎஸ்பி பாஸ்கரன் தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர். பின்னர் பவித்ரா உடல் கொட்டாரம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.