நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிமுகவின் முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தேசிய, மாநில கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
அதேபோல், மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதிமுக - பாஜக இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. மக்களவை தேர்தலில் தமிழகத்திற்கான பொறுப்பாளர் பியூஸ் கோயல் சமீபத்தில் தமிழகம் வந்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்தச் சந்திப்பின் போது தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இருந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனையடுத்து, பாஜக தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். அனைவரது எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் நல்ல முடிவாக இருக்கும்” என்று கூறினார்.