டிரெண்டிங்

சேரன் மீது சங்க விதிப்படி நடவடிக்கை: விஷால் அறிக்கை

webteam

தயாரிப்பாளர் சங்க விதியின்படி இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை எடுக்கப்பப்படும் என்று விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட நேற்று மனுத்தாக்கல் செய்தார். அரசியல் சார்பில்லாத அமைப்பாகவே தயரைப்பாளர் சங்கம் செயல்பட வேண்டும். ஆகவே நடிகர் விஷால் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இயக்குநர் சேரன் உள்ளிட்ட சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு நடிகை ராதிகா, ராதாரவி உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நடிகர் விஷால் இன்று ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் அவர் “இயக்குநர் சேரன் அவர்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழி வாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத் தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது. 

எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான். என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாற வேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.