காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம் அதனை குறைத்து 177.25 டிஎம்எசி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும். இதனால் தமிழக விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டுக்கு வழி இல்லாத நிலையில், குறைந்தபட்சம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அளவில் கர்நாடகா அரசு நீரை திறந்துவிடுவதையும் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் விஷால் பதிவிட்டுள்ளார்.