டிரெண்டிங்

”அரசியலுக்கு இடைஞ்சல் எற்பட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்” - கமல்ஹாசன் பேட்டி

kaleelrahman

அரசியலுக்கு வந்த பின்னர் பல மிரட்டல்கள் வந்துள்ளது. அரசியலுக்கு இடைஞ்சல் எற்பட்டால் சினிமாவில் நடிப்பது நிறுத்தப்படும், எனது அரசியல் பயணம் தொடரும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “நான் சம்பாதித்த பணத்தை தான் தேர்தலில் செலவு செய்துள்ளேன். செலவு கணக்குகளை நேர்மையாக காட்டியுள்ளேன். அதற்காக அதிகாரிகளே பாராட்டியுள்ளனர்.

அரசியலுக்கு வந்த பின்னர் பல மிரட்டல்கள் வந்தன, எல்லாவற்றிக்கும் தயாராக தான் வந்துள்ளேன். எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக தான் என முடிவு எடுத்துள்ளேன். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின்னர், புதிய படங்களில் நடித்து கூடுதலாக சம்பளம் வாங்கி மீண்டும் மக்களுக்கு செலவு செய்வேன். தனது முகவரி விரைவில் கோவைக்கு மாறும். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் சொல்வது போல, தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவேன் என்பது நிஜமல்ல” என தெரிவித்தார்.