டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையம்

JustinDurai

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உத்தேசமாக 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில் பதிவாகி உள்ள வாக்குகளின் உத்தேச சதவீதங்களை மாவட்ட வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சியை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 52.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கரூரில் 75.84 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். குறைந்தபட்சமாக தலைநகர் சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நகராட்சியை பொறுத்தமட்டில் மொத்தமாக 68.22 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில், தருமபுரியில் அதிகப்பட்சமாக 81.37 சதவீதம் பேர் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரியில் 59.98 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 74.68 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதில் அதிகப்பட்சமாக கரூரில் 86.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக நீலகிரியில் 66.29 பேர் வாக்களித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஆவடியில் ஆர்வத்துடன் வாக்களித்த நரிக்குறவர் இன மக்கள்