டிரெண்டிங்

'கெஜ்ரிவால் விரைவில் பிரதமர் பதவி ஏற்பார்' - ஆம் ஆத்மி உற்சாகம்

JustinDurai

''ஆம்  ஆத்மி தேசிய கட்சியாக மாறியுள்ளது. நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி மாறும்'' எனத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பகல் 1.20 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 91 இடங்களிலும்,  காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும்  முன்னிலை பெற்றுள்ளன. இதனால் பஞ்சாபை ஆம் ஆத்மி கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சதா கூறுகையில், ''பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை அமைக்கத் தயாராக உள்ளோம். ஆம் ஆத்மி உயரும்போது பிற வலிமையான சிம்மாசனங்கள் அசைக்கப்படுகின்றன. ஏனெனில் ஆம்  ஆத்மி ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெறவில்லை. அது ஒரு தேசிய கட்சியாக மாறியுள்ளது. நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி மாறும்.

அரவிந்த் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். நிச்சயமாக அவர் விரைவில் பிரதமர் நாற்காலியில் அமர்வார். ஒரு மாநிலத்தில் பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைக்க பத்து ஆண்டுகள் ஆனது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி தொடங்கி பத்து ஆண்டுகள் கூட ஆகவில்லை. இரண்டு மாநிலங்களில் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம்" என்று கூறியுள்ளார்.