பாம்புகளுக்கு மத்தியில் பெண்குழந்தை
பாம்புகளுக்கு மத்தியில் பெண்குழந்தை Instagram
டிரெண்டிங்

சூட்கேசில் பாம்புகளுக்கு நடுவே ஹாயாக வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் சிறுமி.. இணையத்தை அலறவிட்ட வீடியோ!

Jayashree A

சோஷியல் மீடியாவில் கவனம் பெறுவதற்காக பலரும் பல விதமான நூதன முறைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூகவலைதளங்களான ட்விட்டர், முகநூல், இன்ஸ்டா போன்ற பக்கங்களில் மக்களின் லைக்குகளை பெருவதற்காகவும் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் சிலர் அபாயகரமான செயல்களை செய்து அதை பதிவிட்டும் வருகின்றனர்.

பூனை, நாய் போன்ற விலங்குகள் செல்லப்பிராணிகளாக இருந்தாலும், சிலசமயம் அது அதன் குணத்தை காண்பித்துவிடும். சில சமயங்களில் விலங்குகள் மனிதர்கள் தாக்கப்படும் வீடியோக்களையும் சமூகவளைதளங்களில் பார்த்துவருகிறோம். ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் சிலர் இத்தகைய செயல்களை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாவில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று பலரையும் திகைப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், சிலவகை நச்சுக்கொண்ட பாம்புகளின் தீண்டினாலே உடனடியாக மனிதர்கள் மரணிக்கும் அபாயமும் உண்டு. இந்நிலையில், பாம்புடன் சிறுமி ஒருவர் சூட்கேஸில் இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ தான் தற்போது இணையத்தை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் முதலில் சூட்கேஸ் ஒன்று காட்டபடுகிறது. பின்னர், அந்தசூட்கேட்ஸ் திறக்கப்பட்டதுடன் அந்த பெண்குழந்தை கேமராவைப் பார்த்து, “ஹலோ எவ்ரிபடி” என்று சொல்கிறார். ஆனால், ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க அந்த பெண்குழந்தை சூட்கேசில் பாம்பு குவியலுக்கு மத்தியில் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் நமக்கு ’பக்’ என்று ஆகிறது. ஒன்று இரண்டு அல்ல.. ஏராளமான பாம்புகள் அவரது உடலை சுற்றிலும் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அந்த சிறுமியும் மிகவும் கூல் ஆக படுத்துக் கொண்டு மிகவும் இயல்பாக இருக்கிறது. ஏற்கனவே பழக்கம் ஆனது போல் நடந்து கொள்கிறார். ஆனால் பார்ப்பவர்களுக்கு திக்கென்று தூக்கிவாரிப் போட்டுவிடுகிறது.

அந்த இன்ஸ்டா பக்கத்தை சென்று பார்த்தால் இதேபோன்று பாம்புகளுடன் சிறுமி இருக்கும் பல வீடியோக்கள் இருக்கிறது. சில வீடியோக்களில் கருநாகப் பாம்புகள் கூட இருக்கிறது. இவையெல்லாம் விஷம் நீக்கப்பட்ட பாம்புகளாகத்தான் இருக்கக் கூடும்.

இருப்பினும், லைக்ஸ்களுக்காகவும், கவனம் பெறுவதற்காகவும், இப்படியான செயல்களில் இறங்க வேண்டுமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இப்படிபட்ட வீடியோக்கள் வலைதளங்களில் உலாவ விடுவது அபாயகரமான ஒன்று என்றே பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இருப்பினும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி 600000 பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

குறிப்பாக, சிறுமியை இதுபோன்று வீடியோவுக்காக பயன்படுத்துவது ஒருவகையில் வன்கொடுமை தான் என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.