டிரெண்டிங்

வேலூர் தேர்தல் ரத்து ; ஏ.சி.சண்முகம் வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

webteam

வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு. 

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால் இந்த அதிரடி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கும், தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 

மேலும், தமது வீட்டில் சோதனை செய்து எடுக்கப்பட்ட பணத்துக்கு உரிய கணக்குகள் காண்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றிப பெற வைப்பதற்காக வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வருமான வரித்துறை அளித்த தவறான அறிக்கையின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்துள்ள கதிர் ஆனந்த், திட்டமிட்டபடி வேலூரில் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு மேல் உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் அந்த மனு விசாரணைக்கு வருகிறது.