டிரெண்டிங்

5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951

Veeramani

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 1951-ஆம் ஆண்டு தொடங்கி 5 மாதங்கள், 68 கட்டங்களாக நடந்தது.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து, 1950 ஆண்டு ஜனவரி 26-இல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, 1951-இல் நாடு முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தல் 5 மாதங்கள், 68 கட்டங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின்போதுதான் நாட்டில் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்தும் முதன்முறையாக உருவாக்கப்பட்டது. இந்த தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, மாகாண தேர்தலும் நடத்தப்பட்டது.

1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தொடங்கிய இந்த தேர்தல், 1952 பிப்ரவரி 21 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 489 இடங்களில் 364 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது, சிபிஐ 16 இடங்களிலும், அம்பேத்கரின் கட்சி 2, பாரதிய ஜனசங்கம் 3, கிருபாலனியின் கட்சி 9 , சோசியலிஸ்ட் கட்சி 12 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலில் மும்பை தொகுதியில் போட்டியிட்ட அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பால் வியாபாரியிடம் தோற்றார். சென்னை மாகாண தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வென்றது.

இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 533 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1849 பேர் போட்டியிட்டனர், 14 தேசிய கட்சிகள் மற்றும் 39 மாநில கட்சிகள் உட்பட மொத்தம் 53 கட்சிகள் களத்தில் இருந்தன. இந்த தேர்தலுக்காக நாடு முழுவதும் 1,96,084 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன, இந்த தேர்தலில் 17 கோடியே 32 இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர்