டிரெண்டிங்

3 மாதம் 3 1/2 அடி உயரம்... குலை தள்ளிய அதிசய வாழை மரம்....

kaleelrahman

விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளத்தில் 3 1/2 அடி உயரத்தில் பூ பூத்து குலை தள்ளிய வாழை மரத்தை மக்கள் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிஸ்வரன். இவர் விவசாய பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதயில் உள்ள இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மிளகாய், மக்காச்சோளம், கம்பு, கொய்யா, வாழை போன்றவைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது தோட்டத்தில் பயிரிட்டுள்ள நாட்டு வாழை மரம் 3 1/2 அடி உயரம் வளர்ந்தபோதே குலை தள்ளியுள்ளது. பொதுவாக நாட்டு வாழை, செவ்வாழை, கற்பூரவள்ளி, ரஸ்தாலி போன்ற வாழை ரகங்கள் பூ பூத்து குலை தள்ள சுமார் 8 மாதத்தில் இருந்து 12 மாதம் வரை ஆகும். அதேபோல 7 அடி முதல் 10 அடி உயரம் வரை வளர்ந்த பின்னர் தான் வாழை குலை தள்ளுவது வழக்கம்.

ஆனால் மாரிஸ்வரன் தோட்டத்தில் வளர்ந்துள்ள நாட்டு வாழை மூன்று மாதத்தில் 3 1/2 அடி உயரம் வளர்ந்த நிலையில் குலை தள்ளியுள்ளது. இந்த அதிசய வாழையை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.