டிரெண்டிங்

சென்னை: வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் கொள்ளை: போலீசார் விசாரணை

kaleelrahman

வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை ஆதம்பாக்கம், முன்னாள் இராணுவத்தினர் குடியிருப்பு காலனியில் வசித்து வருபவர் வெங்கட்ராகவலு (52), கோயம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த பகுதியில் உள்ள குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வாடகைக்கு குடிவந்துள்ளார்.


இந்நிலையில் தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாததால் கடந்த 14ம் தேதி அயனாவரத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்தநாள் வேலையாள் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.


தகவலின் பேரில் வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்து போலீசார் வந்து கைரேகைகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.