டிரெண்டிங்

தோட்ட வேலைக்குச் சென்ற பெண்கள் மீது மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு... தேனியில் சோகம்

kaleelrahman

ஆண்டிபட்டி அருகே தோட்டத்தில் வேலை செய்த பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொரு பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் பகுதியை சேர்ந்த 12 பெண்கள் கண்டமனூர் விலக்கு அருகே உள்ள அரப்படி தேவன்பட்டி கிராமத்திற்கு தோட்டத்தில் மிளகாய் பறிக்கும் கூலி வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, அவர்கள் தோட்டத்தில் மிளகாய் பறித்து கொண்டிருந்தபோது வானில் கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் வெட்டியது. திடீரென பெண்கள் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது.

இதையடுத்து வேலை செய்த பெண்கள் அனைவரும் மயக்கம் அடைந்தனர். பின்னர் கண் விழித்து பார்த்தபோது, மணி, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தனர் பின்பு மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த நாகம்மாள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிளகாய் பறிக்கச் சென்ற பெண்கள் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.