டிரெண்டிங்

17 வயது சிறுமியை கடத்தி வைத்து பாலியல் துன்புறுத்தல்- கூலித் தொழிலாளி கைது

PT

நாமக்கல் அருகே 17 வயது சிறுமியை கடத்தி மூன்று மாதங்களாக மறைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


நாமக்கல் அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இச்சிறுமியை எருமப்பட்டி அடுத்துள்ள வரகூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான கட்டடத் தொழிலாளி மணிகண்டன் என்பவர் கடத்தி சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர்கள் கடந்த மார்ச் மாதம் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட எருமப்பட்டி போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.

விசாரணையில் மணிகண்டன் சிறுமியை கேரளாவிற்கு கடத்திச் சென்று தங்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கேரளா சென்று மணிகண்டனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மணிகண்டன் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டன் மீது போக்சோ மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.