டிரெண்டிங்

இடைத்தேர்தலில் வென்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் மே 28இல் பதவியேற்பு

webteam

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்களும் வரும் 28 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18-ம் தேதியும், 4 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து எண்ணப்பட்டன. இதில் அதிமுக 9 இடங்களிலும் திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரை அதிமுகவிடம் 9 எம்.எல்.ஏக்களையும் சேர்த்து 123 பேர் இருக்கிறார்கள். இதில் 3 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் கருணாஸ், தனியரசு, அன்சாரி ஆகியோர் இல்லை என்றாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுக அண்மையில் வெற்றி பெற்ற 13 சட்டமன்ற உறுப்பினர்களோடு சேர்த்து 101 எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் வைத்துள்ளனர். கூட்டணி கட்சியினரோடு சேர்த்து 109 பேர் உள்ளனர். 

இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்களும் வரும் 28 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர். தலமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.