டிரெண்டிங்

பள்ளிக்கட்டணத்திற்கு பணமின்றி தவிக்கும் மாணவி : ஆட்சியரிடம் முறையிட்ட பெற்றோர்

webteam

மதுரையில் 10ஆம் வகுப்பு முடித்த மாணவியை 11ஆம் வகுப்பு படிக்க வைக்க உதவுமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பேச்சியம்மாள், சோலைப்பாண்டி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், சோனாலி பானர்ஜி என்ற மகளும் உள்ளனர். சோலைப்பாண்டி தையல் தொழிலும், பேச்சியம்மாள் கூலி வேலையும் பார்த்து, தங்கள் மகளை பிரபலமான தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 10 வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். சோனாலி பானர்ஜி நன்றாக படித்து வந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் 444 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்தார்.

பதினொன்றாம் வகுப்புக்கு லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டிய நிலை இருப்பதால், அவரது குடும்பத்தினர் கல்விக்கட்டணம் கட்ட முடியாத நிலையில் உள்ளனர். கொரானா பொதுமுடக்கத்தால் வருமானம் இழந்த அவரது பெற்றோர், மகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் வறுமையில் வாடியுள்ளனர். பள்ளிக் கட்டணம் மட்டுமின்றி தற்போது ஒரு வேளை உணவுக்கும் கஷ்டப்படுவதாக மாணவியின் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே தங்கள் மகளின் படிப்பினை கருத்தில் கொண்டு மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அவரை சேர்க்க வேண்டும் என மதுரை ஆட்சியர் வினயிடம், மகளின் மதிப்பெண் சான்றிதழோடு சென்று கோரிக்கை வைத்தனர். மாணவி சோனாலி கூறும்போது, “எனது பெற்றோர் என் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். நான் படித்து தான் என் தம்பிகளையும், குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். நான் ஆட்சியராக விரும்பும் நிலையில், தற்போது ஆட்சியர் என் கல்விக்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.