டிரெண்டிங்

"அதிமுகவை நாங்கள் ஆட்டிப் படைக்கவில்லை!" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

Veeramani

"அதிமுகவை நாங்கள் ஆட்டிப் படைக்கவில்லை, மாநில அரசை நாங்கள் மதிக்கிறோம், அவர்கள் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம்" என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்தியா டுடே நிகழ்வில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா " அதிமுகவை பாஜக கட்டுப்படுத்துவதாக உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பம் தவறானது. மாநில கட்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கிறோம்; அவற்றுக்கான ஒத்துழைப்பையும் வழங்குகிறோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுகவை நாங்கள் ஆட்டிப் படைக்கவில்லை. சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியதற்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது முழுக்க முழுக்க சசிகலாவின் முடிவு.

ஸ்டாலின் போன்ற ஒரு நாத்திகவாதி கையில் வெற்றி வேலை ஏந்துவதற்கு பாஜகதான் காரணம். ஜல்லிக்கட்டை காத்தவர் பிரதமர் மோடி. தமிழ் இலக்கியம், கலாசாரத்தை உலக அரங்கில் எடுத்து செல்பவராகவும் மோடி இருக்கிறார். மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம். அசாம் மாநிலத்தை மீண்டும் பிடிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அமையும், புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம், கேரளா தேர்தல் நல்லதாக முடியும். இந்த தேர்தலை மிக முக்கியமாக எண்ணுகிறோம்" என்றார் ஜே.பி. நட்டா.