டிரெண்டிங்

"என் சொந்த செலவில் பறப்பவன் நான்!" - கமல்ஹாசன்

Veeramani

"உங்களது நிதியிலிருந்து பெட்ரோல் அடித்துக் கொண்டு வருபவன் நான் இல்லை; என் சொந்த செலவில் பறப்பவன்" என்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு, குன்னூர் தொகுதி வேட்பாளர் ராஜா குமார் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், "சினிமா எனது தொழில். அரசியல் எனது கடமை. ஹெலிகாப்டரில் பறந்து வந்ததற்கு காரணம், உங்களை விரைவில் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே. ஆனால், உங்களது நிதியிலிருந்து பெட்ரோல் அடித்துக் கொண்டு வருபவன் நான் இல்லை; என் சொந்த செலவில் பறப்பவன்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் சிறப்பாகவே உள்ளது. ஆனால், பணம் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு, இல்லாத இடத்தை மட்டுமே ஆய்வு செய்கின்றனர். மக்கள் நீதி மய்ய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி நிதியை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறமுடியும்" என்றார் கமல்ஹாசன்.