டிரெண்டிங்

‘பாபர் மசூதி இடிப்பு பெருமைக்குரியது’ சாத்வி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

webteam

‘பாபர் மசுதி இடித்தற்கு நான் பெருமை படுகிறேன்’ என்று சாத்வி பிரக்யா கூறியதற்கு அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா தாகூர் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இவர் பிரச்சாரத்தின் போது பல சர்ச்சையான கருத்துகளை கூறிவருகிறார். 

இந்நிலையில் சாத்வி பிரக்யா ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு நான் ஏன் வருத்தப்படவேண்டும்? அதற்காக நான் பெருமைதான் படுவேன். தேவையில்லாத மனிதர்கள் சிலர் ராமர் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை தடுக்கவே அந்த மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் நாங்கள் நிச்சயம் ராமர் கோயில் கட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போபால் தொகுதியின் தேர்தல் ஆதிகாரி சாத்வி பிரக்யாவிற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “சர்ச்சைக்குரிய பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக பேசியது குறித்து 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சாத்வி பிரக்யா மும்பை தாக்குதலில் பலியான ஹெமந்த் கார்காரே இறந்ததற்கு நான் விட்ட சாபம்தான் காரணம் எனத் தெரிவித்து பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் சாத்வி பிரக்யா அதற்கு மன்னிப்பும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.