டிரெண்டிங்

“சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக நெருப்புடன் விளையாடுகிறது” : ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

webteam

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காஷ்மீர் தொடர்பான வாக்குறுதிக்கு அம்மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக வரும் 11 தேதி நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கப்போவதாக தெரிவித்தது. ஏனென்றால் இந்தப் பிரிவுகள் மக்களிடையே பாகுபாடு உண்டாக்குவதாகவும் காஷ்மீர் பெண்களுக்கு எதிராக இருப்பதாலும் அவற்றை நீக்கவுள்ளோம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் இதற்கு காஷ்மீர் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேசிய மாநாட்டு கட்சி தலைவரான ஃபரூக் அப்துல்லா, “அரசியலமைப்புச் சட்ட பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை நீக்கி எங்களின் உரிமைகளை பறிக்க நினைத்தால் நாங்கள் கடுமையாக போராடுவோம். அத்துடன் பிரிவு 370 நீக்கப்பட்டால் இந்தியாவிற்கும் ஜம்மு-காஷ்மீருக்குமான உறவு முறிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

(ஃபரூக் அப்துல்லா)

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, “பாஜக ஆட்சி வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகிய அனைத்து மக்கள் பிரச்னையிலும் தோற்றுவிட்டது. பிரிவு 370 ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கிறது. அதனால் இப்பிரிவை அழித்தால் ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவின் அதிகாரம் செல்லாது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் பகுதி இந்தியாவிலிருந்து விடுதலை பெற்றுவிடும்.” எனத் தெரிவித்தார்.

( மெகபூபா முஃப்தி)

ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சஜாத் லோன், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை புனிதமானவை. இதனை நீக்குவது மிகப்பெரிய பேரிடர் ஆக அமையும்” எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே அரசியலமைப்புப் பிரிவு 35ஏ குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.