டெக்

அக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்

அக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்

webteam

சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யும் பார்க்கர் விண்கலத்தை நாசா நாளை விண்ணில் ஏவுகிறது.

பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனை எந்த உயிரினத்தினாலும் நெருங்கமுடியாது. அக்னியை உமிழும் சூரியனின் மையப்பகுதியில் என்ன உள்ளது? சூரிய வளிமண்டலத்தில் உள்ள மர்மங்கள் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியில் களமிறங்கியுள்ளது நாசா.

கடந்த 2006-ம் ஆண்டு சூரியனின் கிரோனா பகுதியை ஆய்வு செய்யும் வகையில் STEREO என்ற இரு செயற்கைக்கோள்களை நாசா அனுப்பியது. பூமியில் இருந்து தெளிவாகத் தெரியாத சூரியனின் பல அம்சங்களை இந்தச் செயற்கைக் கோள்கள் படமெடுத்து அனுப்பி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சூரியனுக்கு நாளை ஏவப்படவுள்ள பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யவுள்ளது. 150 லட்சம் டிகிரி செல்சியஸில் தகதகத்து கொண்டிருக்கும் சூரியனை இந்த விண்கலம் வெற்றிகரமாக நெருங்கி ஆய்வை தொடங்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டுகளில் ஒன்றாக கருதப்படும் டெல்டா ஹெவி என்ற ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்லவுள்ளது.

சூரியனின் வெப்பத்தால் பொசுங்கிடாமல் இருக்க பார்க்கர் விண்கலம் கார் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் சூரியனின் வட்டப்பாதையை சென்றடையும் பார்க்கர், அதன்பிறகு 7வருடங்கள் ஆய்வை மேற்கொள்ளும். பூமியில் இருந்து 14 கோடி கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சூரியனின் அரிய புகைப்படங்களை படம்பிடித்து, பார்க்கர் விண்கலம் அனுப்பும்.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள மூன்றாவது அடுக்கான கொரோனோ வளிமண்டலத்தை விண்கலம் அடையும்போது அதன் தொடர்பு துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சூரியனுக்கு அருகே சுமார் 60 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பார்க்கர் விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது. வரும் 2020-ஆம் ஆண்டில் சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு ஆதித்யா என்று செயற்கைக்கோளை அனுப்பி வைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.