டெக்

போலி செய்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை - ட்விட்டர் இந்தியா

webteam

தவறான செய்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வளைத்தளமான ட்விட்டரில் அதிக அளவு தவறான செய்திகள் பரவுவதாக தகவல் வெளியானது. அத்துடன் ட்விட்டர் நிறுவனம் ஒருசாரார் கணக்குகளை முடக்கியதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் ட்விட்டரில் ஆட்சேபிக்கக்கூடிய செய்திகளை நீக்குவதில் தாமதம் ஏற்படுவதாக அரசு ட்விட்டர் நிறுவனம் மீது குற்றஞ்சாட்டியிருந்தது. 

இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியது. அதில் ட்விட்டரின் சிஇஒ நாடாளுமன்ற நிலைக் குழு முன் ஆஜாராக வேண்டும் என்றிருந்தது. ஆனால் ட்விட்டர் அதிகாரிகள் இதுவரை அந்த நிலைக்குழுவின் முன் ஆஜராகவில்லை. இதனால் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் ட்விட்டர் சிஇஓ நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கெடு விதித்துள்ளது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தவறான செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் ட்விட்டர் நிறுவனம் தனது குழுவை விரிவுப்படுத்தவுள்ளதாக தெரிவித்தது. மேலும் ட்விட்டர் நிறுவனம் ஐக்கிய நாடுகளின் கலாச்சார அமைப்புடன் சேர்ந்து பணியாற்றுபோவதாக கூறியது. இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 1 லட்சம் இளைஞர்களுக்கு டிஜிட்டலில் தவறான செய்திகளை கையாள்வது குறித்து பயிற்சிப்பட்டறை நடத்தவுள்ளதாக கூறியது.

அதேபோல ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் #EduTweet என்ற ஹேஷ்டேக் மூலம் பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் தளங்களை கையாள்வது பற்றி விழிப்புணர்வு செய்து வருகிறதாக கூறியுள்ளது. அத்துடன் ‘ரெஸ்பான்சிபுள் நெட்டிஸம்’ என்ற அமைப்புடன் சேர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு சமூக வளைத்தளங்கள் பயன்படுத்துவது குறித்து அறிவுரை தந்துவருவதாக தெரிவித்துள்ளது.