ஏஐ பயன்பாடு நம்முடைய அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவரும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தின் வரவால் வேலை இழப்பு அதிகரிக்கக் கூடும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகளவில் பெண்கள் மற்றும் ஆண்களின் வேலைகள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படும் என ஐ.நா.வின் “Gender Snapshot 2025” என்ற அறிக்கை எச்சரிக்கிறது. இதில், ஆண்களின் வேலைகளை விட பெண்களின் வேலை அதிக அளவில் பாதிக்கப்படும் எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. என்ன விவரம் என பார்க்கலாம்.
உலகளவில் பெண்கள் செய்யும் வேலைகளில் கிட்டத்தட்ட 28 சதவீத வேலைகள் செயற்கை நுண்ணறிவின் வரவால் ஆபத்தில் உள்ளன; ஆண்களின் வேலைகளில் 21 சதவீத வேலைகள் ஆபத்தில் உள்ளன என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது . தொழில்நுட்பத் துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டி, உலகளாவிய தொழில்நுட்பப் பணியாளர்களில் 29 சதவீதம், தொழில்நுட்பத் தலைமைப் பதவிகளில் 14 சதவீதம் மட்டுமே பெண்கள் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
அதிக வருமானம் உள்ள நாடுகளில் பாலின இடைவெளி கடுமையாக உள்ளது. அங்கு வேலை செய்யும் பெண்களில் 9.6 சதவீதம் பேர் ஆட்டோமேஷன் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். ஆண்களில் 3.5 சதவீதமாக உள்ளது. ஏஐ வரவால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய அதாவது, எழுத்தர் மற்றும் நிர்வாகப் பணிகளில் அதிக அளவில் பெண்கள் குவிந்திருப்பதே இதற்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. நகர்ப்புறங்களில் நடுத்தரக்கல்வி முதல் உயர்கல்வி வரை படித்துள்ள இளம் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வங்கி, நிதி, காப்பீடு அல்லது பொதுத்துறையில் பணிபுரிபவர்களாக உள்ளனர். இவர்களின் வேலைகள் AI- காரணமாக பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.
'Gender Snapshot 2025' என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, SDGs (Sustainable Development Goals) முழுவதும் பாலின சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும், உள்ளடக்க கொள்கை வடிவமைப்பு (inclusive policy design) இல்லாததும் - எதிர்கால நோக்கத்தில் - சமத்துவமின்மையை அதிகரிக்கும் என எச்சரிக்கிறது.
தொழில்சார் விநியோகம் மற்றும் டிஜிட்டல் திறன்களில் உள்ள இடைவெளிகள் காரணமாக, தொழிலாளர் சந்தையில் AI-ஏற்படுத்தும் மாற்றங்கள் பெண்களை விகிதாசாரமாக பாதிக்கக்கூடும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இது வேலைவாய்ப்பைப் பாதுகாக்க gender-sensitive policies மற்றும் பயிற்சியின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால், அனைவருக்கும் சமமான அணுகலை உலக நாடுகள் உறுதி செய்தால், அது சமநிலையை எட்டுவதற்கான மிகப்பெரிய சக்தியாக அமையக்கூடும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
உலகம் ஒரு புதிய இடையூறை எதிர்கொள்ளும் நிலையில், கடந்த கால தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் சமத்துவமின்மை கேள்விக்குறியாக்கப்படும் அபாயம் உள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.