டெக்

“வாட்ஸ்அப் வேண்டுமென்றால் பணம் கட்டுங்கள்” - வைரலாக பரவும் செய்தி!

webteam

வாட்ஸ்அப் முடங்கியதை பயன்படுத்திக்கொண்டு பல போலி செய்திகள் உலவியதாக வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது

வாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 3ம் தேதி  வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதனையடுத்து சமூகவலைத்தள வாசிகள் குழம்பி போகினர். ட்விட்டர் பக்கம் குவிந்த பயனாளர்கள் பேஸ்புக் முடங்கியது குறித்து ஹேஷ்டேக்குகளை பதிவிட்டனர். இதற்கு விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனம் பராமரிப்பு நடவடிக்கைகளால் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. பிரச்னை சரிசெய்யப்பட்டதாக தெரிவித்தது.

இந்நிலையில் இந்தத் தொழில்நுட்ப கோளாறை பயன்படுத்திக்கொண்ட சில விஷமிகள் வாட்ஸ் அப்பில் பொய்யான செய்திகளை பரப்பினர். வாட்ஸ்அப் பயனாளர்கள் பலருக்கும் ஒரு பார்வேர்ட் செய்தி வந்தது. அதில், ''அதிக பயனாளர்கள் இருப்பதால் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை இனி இயங்காது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இல்லையென்றால் 48 மணி நேரத்தில் உங்களது வாட்ஸ்அப் டிஆக்டிவேட் செய்யப்படும். மீண்டும் ஆக்டிவ் செய்ய வேண்டுமென்றால் ரூ.499 பணம் செலுத்த நேரிடும். இது மத்திய அரசால் அனுப்பப்படும் செய்தி'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை உண்மை என நம்பிய பல பயனாளர்கள் அந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் பரப்பினர். அதே போல் ''வாட்ஸ்அப் ஒரு வாரத்துக்கு தடை' செய்யப்பட்டுள்ளது’’ எனவும் போலி செய்தி பரப்பப்பட்டது. 

போலிச் செய்தியை தடுக்க வாட்ஸ்அப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சில சந்தர்ப்பங்களை பயன்படுத்தி பலரும் போலிச் செய்திகளை பரப்புகின்றனர். பயனாளர்கள் விழிப்புடன் இருந்து செய்தியின் உண்மை குறித்து அறிந்த பிறகே அதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டுமென வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.