டெக்

சாதிய பாகுபாடு பார்ப்பதாக ட்விட்டர் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

jagadeesh

ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், CancelAllBlueTicksinIndia என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான திலீப் மண்டல், ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றம்சாட்டி, VerifySCSTOBCMinority என்ற ஹேஷ்டேக்கை தொடங்கினார்.அதனைத் ‌தொடர்ந்து, பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, 26 ஆயிரத்துக்கும்‌ அதிகமான பயனாளர்கள் பின்தொடர்ந்தும்‌, தன்னுடயை ட்விட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டு நீ‌ல நிற டிக் வழங்கப்பட்டவில்லை என்றும், அதில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே, பயனாளர்களின் கணக்கை சரிபார்க்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ட்விட்டர் நிறுவன செய்தித் தொடர்பாளர், தொடர்ந்து இயங்கிவரும் ஒவ்வொருவரின் கணக்குகளும் முறையாக சரிபார்க்கப்பட்டு வந்ததாக கூறினார்.ஆனால், பட்டியலினத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களின் கணக்குகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டு புளூ டிக் வழங்கப்படுகிறது என செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா குற்றம்சாட்டியுள்ளார். பிரபலங்களின் பெயரில் பல பொய்யான கணக்குகள் தொடங்கப்படும் என்ற காரணத்தினால் ‌‌ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற‌ சமூக வலைதள நிறுவனங்கள், உண்மையான கணக்கை சரிபார்த்து ப்ளூ டிக் வழங்குகின்றன.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் பின் தொடரும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்விட்டர் கணக்கும் சரிபார்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.