டெக்

கட்டண சேனல்கள் விவகாரம்: பிப்ரவரி 1-க்கு பிறகு நீட்டிக்க முடியாது - ட்ராய் திட்டவட்டம்

webteam

கட்டண அடிப்படையில் சேனல்களைத் தேர்வு செய்து கொள்வதற்கான கெடுவை பிப்ரவரி ஒன்றுக்குப் பிறகு நீட்டிக்க முடியாது என ட்ராய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

வருகின்ற 31ஆம் தேதி முதல் அனைத்து சேனல்களுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என அண்மையில் டிராய் சார்பில் அறிவிப்பு வெளியாகியது. அத்துடன் 31ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் சேனல்களை தேர்வு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக டிராய் அறிவித்த முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.153 கட்டணத்தில் 100 இலவச சேனல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் 25 சேனல்கள் டிடி சேனல்கள். மீதமுள்ள 50 சேனல்கள் இலவச சேனல்கள். அவை மொழிக்கேற்றவாறு வழங்கப்படும். மீதமுள்ள 25 சேனல்களை கட்டண சேனல்களாகும். ஆனால் அவற்றை இலவச சேனல்களை குறிப்பிட்டு மாற்றிக்கொள்ள முடியும். 

அதேசமயம் ஒரு ஹெச்டி சேனலை தேர்வு செய்தால், அது இரண்டு இலவச சேனல்களுக்கு சமம். இந்த ரூ.153ல் ஜிஎஸ்டி வரியும் அடங்கும். இதற்கு மேற்கொண்டு சேனல்களை பார்க்க விரும்புவோர், சேனல்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை கட்டணத்தில் சேர்த்து பார்த்துக்கொள்ளலாம்.

அதேசமயம் டாடா ஸ்கை போன்ற டீடிஎச் சேவைகளுக்கு இதன்மூலம் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனப்படுகிறது. அதேசமயம் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட, கேபிள் சர்வீஸ் எனக் கூடுதலாக எந்தத் தொகையும் வாங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டண அடிப்படையில் சேனல்களைத் தேர்வு செய்து கொள்வதற்கான கெடுவை பிப்ரவரி ஒன்றுக்குப் பிறகு நீட்டிக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதற்கு பதிலளித்துள்ள ட்ராய், கெடுவை பிப்ரவரி ஒன்றுக்குப் பிறகு நீட்டிக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. DTH மற்றும் கேபிள் சேவை அளிப்பவர்கள் வாடிக்கையாளர் விரும்பும் சேனல்களைத் தேர்வு செய்வதற்கான வசதியை இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாக அளிக்கவும் ட்ராய் உத்தரவிட்டுள்ளது.