டெக்

அதிவேக இண்டர்நெட் சேவைக்காக செயற்கைகோள்

rajakannan

அதிவேக இணைய சேவை வழங்குவதற்கான செயற்கைக்கோள் சோதனை முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாளை மறுதினம் மேற்கொள்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். அந்த வகையில், அதிவேகமாக இணைய சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்கைக்கோள் அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டது.

அதன்படி இரண்டு செயற்கைக்கோள்களை கொண்ட ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாளை மறுதினம்(21ஆம் தேதி) விண்ணில் செலுத்துகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள வாண்டென்பெர்க் தளத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை காலை 6.17 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

முன்னதாக, 'ஃபால்கோன் ஹெவி' என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து இம்மாத தொடக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்டது.