டெக்

ஒரே ஒரு மாற்றத்தால் 600 கோடி கூடுதல் லாபம்! - ஆப்பிள் நிறுவனத்துக்கு கை கொடுத்த ஐடியா

webteam

ஆப்பிள் நிறுவனம் துரிதமாக எடுத்த ஒரே ஒரு மாற்றத்தால் ரூ. 600 கோடி வரை கூடுதல் லாபம் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020-ம் ஆண்டு புதிய 12 சீரிஸ் ஐபோன்களை அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதே வருடம் முதல் புதிய  ஐபோன்களை வாங்கும் போது கொடுக்கப்பட்டு வந்த சார்ஜர் மற்றும் இயர்போன்களை பெட்டியிலிருந்து நீக்கப்போவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது. புதிய ஐபோன்கள் அடங்கிய பெட்டியின் அளவை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டது ஆப்பிள் நிறுவனம். பெட்டியின் அளவு குறையும் என்பதால் வழக்கமான அளவை விட 70  சதவிகிதம் கூடுதலாக  ஐபோன்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

இதனால் தேவையற்ற கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியும். பெட்டியைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்களின் அளவும், மின்னணு கழிவுகளின் அளவும் குறையும் என பல்வேறு காரணங்களை அடுக்கியது ஆப்பிள் நிறுவனம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அந்த முடிவை எடுத்ததாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்ததது. ஆப்பிள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால் பெரும் லாபம் அந்நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது இப்போது தெரிய வந்திருக்கிறது. 2020 ஆண்டு தொடங்கி தற்போது வரை உலகம் முழுவதிலும் 190 மில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

அவற்றில் சார்ஜர் மற்றும் இயர்போனை நீக்கியதால் ஒவ்வொரு பெட்டியிலும் 35 டாலர் வரை செலவு மிச்சமாகியிருக்கிறது. மேலும் ஆக்ஸசரீஸ்களாக சார்ஜர், இயர்போன் போன்றவறகிட்டத்தட்ட விற்பனை செய்ததன் மூலமாக 296 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்திருக்கிறது. இவற்றை மொத்தமாகச் சேர்த்துக் கணக்கிடும் போது  6.5 பில்லியன் அமெரிக்க டாலர் , இந்திய ரூபாய் மதிப்பில்  சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு வருமானமாகக் கிடைத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

- மு.ராஜேஷ் முருகன்