இந்தியாவில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் 29% பெண்கள் இணையதளத்தை உபயோகிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
யூனிசெஃப் என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியக்குழு உலகமெங்கும் இணையதளம் பயன்பாடு குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், உலக அளவில் 3ல் ஒரு பங்கு சிறுவர்கள் இணையதளத்தை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு தேவையான அறிவுப்பூர்வமான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் இணையதளத்தில் இருப்பதாகவும், அதேசமயம் சிறுவர்கள் மனதை தவறான பாதையில் திசைமாற்றம் செய்யும் தீங்குகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்துவரை தகவல் தொழில்நுட்பத்துறை பெரிதும் வளர்ச்சி கண்டிருந்தாலும், கிராமப்புற பெண்கள் இணையதளங்களை மிகக் குறைவாகவே பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. உலகளவிலான இணையதளப் பயன்பாட்டில் பெண்களை விட ஆண்கள் 12% அதிகமாக உள்ளதாகவும், ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் 3ல் ஒரு பங்கு பெண்களே இணையதளங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டை பொறுத்தவரை இந்தியாவில் அனைத்துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குவதாகவும், எனவே இணையதளப்பயன்பாடு அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் வகையில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.