டெக்

ஈர்ப்பு அலைகள்: நியூட்டன், ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பை உறுதி செய்த நோபல் விஞ்ஞானிகள்!

webteam

நியூட்டன், ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த ஈர்ப்பு அலைகள் பற்றிய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஈர்ப்பு அலைகள் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள் ஆப்பிள் மரத்தில் இருந்து பழங்கள் விழுவதைப் பார்த்த நியூட்டன் பூமிக்கு ஓர் ஈர்ப்புவிசை இருப்பதைக் கண்டறிந்து கூறினார். ஆனால் இப்படி நடப்பது ஏன் என்பதை அவரால் கூற இயலவில்லை. இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியான இந்த ஈர்ப்பு விசையை அண்டம் முழுவதற்கும் பொதுவானதாக்கி, பொது சார்பியல் கோட்பாடு ஒன்றை உருவாக்கினார். அதன்படி, அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை ஈர்த்துக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்றும் அவர் கண்டறிந்து கூறினார்.

பூமி, சந்திரன், சூரியன் என அனைத்துக் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இது பொருந்தும். அண்டவெளியை மிதந்து கொண்டிருக்கும் ஒரு துணியாகப் பாவித்தால், ஒவ்வொரு கோளும், நட்சத்திரமும் அவற்றின் எடைக்கு ஏற்ப ஒரு பள்ளத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு பூமி ஒரு குறிப்பிட்ட அளவு பள்ளத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதைவிட எடைகுறைந்த சந்திரன் குறைந்த அளவு பள்ளத்தை ஏற்படுத்துகிறது. இந்த பள்ளத்தால் ஏற்படும் வளைவு காரணமாகவே பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்று ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார்.

இதேபோல், நட்சத்திரங்கள், கருந்துளைகள் போன்றவை அவற்றின் நிறைக்கு ஏற்ப அண்டவெளியில் பள்ளத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு கோள் மற்றொன்றை நோக்கி ஈர்க்கப்படுவதற்கும், பூமியைப் போன்ற கோளை சந்திரன் போன்ற துணைக் கோள்கள் சுற்றி வருவதற்கும் இந்தப் பள்ளங்கள்தான் காரணம். அதிக நிறை கொண்ட கோள்களும் நட்சத்திரங்களும் ஒன்றையொன்று வேகமாகச் சுற்றிக் கொள்ளும்போது, துணியில் அலைகள் உருவாவதுபோல் அண்டவெளியிலும் அலைகள் உருவாகின்றன. கருந்துளைகள் போன்ற மிகப்பெரிய விண்பொருள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்போது மிக அதிக அளவிலான அலைகள் உருவாகின்றன. இந்த அலைகளைத்தான் ஈர்ப்பு அலைகள், ஆனால் இவை மிக அரிதாகவே நடக்கின்றன. அந்த அலைகள் பல நூறு ஒளி ஆண்டுகள் தொலைவைக் கடந்து பூமிக்கு வரும்போது அதை உணர்ந்து கண்டறிவது மிகவும் கடினம். இந்த அலைகளைக் கண்டறிவதற்காகவே லைகோ என்ற அமைப்பு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் லூசியானா ஆகிய மாநிலங்களில் நிறுவப்பட்டிருக்கிறது. இதேபோல் விர்கோ என்ற அமைப்பு இத்தாலியின் பைசா நகரத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கிறது.

லேசர் அலைகள் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெவ்வேறு கண்ணாடிகளில் பட்டு பிரதிபலிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஈர்ப்பு அலைகள் இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது இந்த லேசர் பிரதிபலிப்பில் மாற்றம் ஏற்படும். அப்படியொரு நிகழ்வு 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. அதன் மூலம் ஈர்ப்பு அலைகள் இருப்பது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. லைகோ மற்றும் விர்கோ அமைப்புகள் மூலம் ஈர்ப்பு விசைகள் இருப்பதை உறுதி செய்ததற்காகவே ரெய்னர் வெய்ஸ், பேரி பாரிஷ், தோர்ன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் நியூட்டனின் நானூறு ஆண்டுக்கு முந்தையக் கண்டுபிடிப்பும், ஐன்ஸ்டீனின் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கண்டுபிடிப்பும் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.