டெக்

“நிலவை பாம்பு விழுங்குவதால் கிரகணம்” சுவாரஸ்ய புராணக் கதைகள் !

jagadeesh

சூரிய கிரகணத்தை பற்றி பல கதைகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. அந்தக் கதைகள் கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும், அறிவியல் பூர்வமாய் அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்பது பின்னாளில் உறுதியாகியுள்ளது.

கிரகணத்தை பற்றி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுவது உண்டு. வியட்நாமில் சூரியன் மற்றும் சந்திரனை தவளை விழுங்குவதால் கிரகணம் ஏற்படுவதாக நம்பப்பட்டது. டென்மார்க், நார்வே, சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட ஸ்கேண்டினேவியன் நாடுகளில், சூரியன் மற்றும் சந்திரனை ஓநாய் கடித்து விழுங்குவதே கிரகணம் என கருதப்பட்டது. கொரியாவில், நெருப்பை உமிழும் நாய் கூட்டம் சூரியனை விரட்டிச் சென்று கடிக்கும்போது கிரகணம் ஏற்படுவதாக மக்கள் நம்பினர்.

மிகப் பெரிய டிராகன் ஒன்று, சூரியனைத் தின்று பசி தீர்த்து கொள்ளும் போது கிரகணம் ஏற்படுவதாக பழங்கால சீனர்கள் நம்பினர். அதனால் கிரகணத்தின்போது பூமியிலிருந்து நெருப்பு அம்புகளை வானில் எய்து டிராகனை விரட்டும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். மேளதாளத்தை உரக்க இசைத்து கிரகணத்தை விரட்டுவதும் ஒரு சில நாடுகளில் வழக்கத்தில் இருந்தது.

நமது இந்திய புராணங்களில் நிலவை பாம்பு விழுங்குவதால் கிரகணம் ஏற்படுவதாக நம்பப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலங்களில் இந்த மாதிரியான கதைகள் உலா வந்தன. சூரியன், நிலவு, பூமி நடத்தும் நிழல் விளையாட்டே கிரகணம் என்பது அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூரியனில் எத்தனை சதவிகிதம் மறைப்பு ஏற்படுகிறதோ அதை வைத்தே கிரகணம் வகைப்படுத்தப்படுகிறது. சூரியனை முழுமையாக நிலவு மறைப்பது முழு சூரிய கிரகணம், பகுதியாக மறைப்பது பகுதி கிரகணம், மையத்தை முழுவதுமாக மறைப்பது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.