டெக்

பிப்.6-ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31 செயற்கைக்கோள்

webteam

ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வரும் பிப்ரவரி 6-ம் தேதி 40-ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 31 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில், 40 ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ஜிசாட் 31 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஏவப்பட உள்ளது. இதற்காக ஜிசாட் 31 செயற்கைக்கோள் கொரூவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் எடை 2,535 கிலோ ஆகும். மேலும் இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஜிசாட் செயற்கைகோள் விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி 5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட ஜிசாட் 11 என்ற செயற்கை கோள் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.