அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களான அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மாஸ்குக்கும் இடையே விண்வெளித் துறையில் யார் கோலோச்சுவது என்ற போட்டா போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் தற்போது உலகின் நெம்ப ஒன் பணக்காரரான பெசாஸின் கை ஓங்கியுள்ளது.
அமேசான் நிறுவனம் தனது பிராஜக்ட் கைப்பர் திட்டத்தின் ஊடாக செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதற்காக அமேசான் நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுமார் 3,236 செயற்கைக்கோள்களை செலுத்தவும், உலகளவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வழங்கவும் 2019இல் அமேசான் திட்டமிட்டிருந்தது. அதற்கு இப்போது பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் முதற்கட்டமாக 578 செயற்கைக்கோள்களை அமேசானின் பிராஜக்ட் கைப்பர் திட்டத்தின் மூலமாக வரும் நாட்களில் அனுப்ப அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் பிராட்பேண்ட் சேவையை வழங்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸைப் போலவே அமேசானும் தனது பிராட்பேண்ட் சேவையை வயர்லெஸ் நெட்வொர்க் மூலமாக அதிவேக இணைப்பை குறைந்த விலையில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இந்த திட்டத்திற்காக எங்கள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ள பத்து பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிராட்பேண்ட் சேவையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும்’ என தெரிவித்துள்ளார் அமேசானின் துணைத் தலைவர் டேவ் லிம்ப்.
வரும் 2026க்குள் அமேசான் தனது செயற்கைக்கோள்களில் பாதியை விண்வெளியில் நிலை நிறுத்தியிருக்கும் என்றும் மீதமுள்ளவற்றை 2029க்குள் அமேசான் செலுத்த வேண்டும் என்றும் FCCயின் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைகோளுக்கு அமேசானின் பிராஜக்ட் கைப்பர் திட்டம் பெருத்த சவாலாக இருக்கும் என சொல்கின்றனர் டிஜிட்டல் உலகின் விஞ்ஞானிகள். ஒன்வெப் நிறுவனத்தின் வீழ்ச்சியும் அமேசானுக்கு இதில் பலன் கொடுக்கலாம்.