டெக்

‘மின்சார வாகன தீ விபத்துக்கு இதுதான் காரணம்’- சந்தேகம் எழுப்பும் நிதி ஆயோக் உறுப்பினர்

Veeramani

மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் பதிவாகியுள்ள நிலையில், மின்சார வாகனங்களுக்காக (EV) இறக்குமதி செய்யப்படும் பேட்டரி செல்கள் இந்திய நிலைமைகளுக்கு ஏற்றதாக இருக்காது என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்திருக்கிறார்.

டிஆர்டிஓவின் முன்னாள் தலைவரான சரஸ்வத், இந்தியா போன்ற அதிக வெப்பநிலை கொண்ட நாட்டில் பேட்டரி செல்களின் மோசமான தரம் காரணமாக மின்சார வாகனங்களில் தீ ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், "இறக்குமதி செய்யப்படும் பேட்டரி செல்கள் இந்திய நிலைமைகளுக்கு ஏற்றதாக இருக்காது. எனவே செல்களை இறக்குமதி செய்யும்போது நாம் சொந்தமாக ஆய்வுகள் மற்றும் கடுமையான சோதனைகளை செய்யவேண்டியது முக்கியம். பேட்டரி தொழில்நுட்பம் என்பது வளர்ந்து வரும் தொழில்நுட்பம்.

இந்தியா தற்போது பேட்டரி செல்களை உற்பத்தி செய்வதில்லை. எனவே நம்முடைய சொந்த பேட்டரி செல் உற்பத்தி ஆலைகளை விரைவில் அமைக்க வேண்டும். நாம் தயாரிக்கும் பேட்டரிகள் இந்தியாவின்  உயர் வெப்பநிலை சூழலுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்

முன்னதாக, மின்சார வாகனங்களின் தீ விபத்துகள் குறித்து மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது ஆரம்பக்கட்ட ஆய்வுகளில், நாட்டில் ஏறக்குறைய அனைத்து மின்சார இரு சக்கர வாகன தீ விபத்துகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட பேட்டரி செல்கள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக ஏற்பட்டுள்ளது என கண்டறிந்துள்ளது.