செயற்கை அறிவின் துணைகொண்டு மனித மூளையை ஹேக் செய்யும் வகையிலான திட்டத்துடன் நியூராலிங் எனும் பெயரில் அமெரிக்காவில் புதிய நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.
விண்வெளி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் தொடங்க உள்ள இந்த நிறுவனம், மனித மூளையில் பொருத்தப்படும் வகையிலான கருவிகளை வடிவமைக்க இருக்கிறது. இந்த கருவிகள் மூளையின் செயல்பாடுகளைக் கண்காணித்து உதவும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதமூளையின் நினைவுத்திறனையும் இந்த கருவிகள் உதவியுடன் அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் எலான் மஸ்க். இந்த கருவிகள் மூலம் மனித மூளையினை சாப்ட்வேருடன் இணைக்க முடியும் என்றும் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவினையும், இயற்கை அறிவினையும் இணைக்கும் புதிய சகாப்தத்துக்கு இந்த நிறுவனம் அடிகோலிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். அவரது இந்த திட்டம் நடைமுறைக்கு வருமாயின், ஒருவரின் மூளையில் தோன்றும் சிந்தனைகளை ஹேக் செய்ய விரும்பும் நபர் எளிதில் கண்டறிந்துவிட முடியும்.