டெக்

"நாங்கள் மிரட்டினோமா? ஸியோமி பொய் சொல்கிறது” - குற்றச்சாட்டுகளுக்கு அமலாக்கத்துறை விளக்கம்

ச. முத்துகிருஷ்ணன்

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகாரில் சிக்கியுள்ள ஸியோமி நிறுவனம், அரசு அதிகாரிகள் தங்கள் நிறுவன உயரதிகாரிகளை மிரட்டியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரில் இந்தியாவின் பிரபல மொபைல் விற்பனையாளரான “ஸியோமி” நிறுவனத்தின் இந்திய வங்கிக் கணக்குகளில் ரூ.5,551 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை. இது வெளிநாடுகளுக்கு “ராயல்டி” என்ற பேரில் சட்டவிரோதமாக பணம் அனுப்பியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. ராயல்டியாக அனுப்பப்பட்ட பணம் அனைத்தும் முறையானவை என்று ஸியோமி தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று அமலாக்கத்துறையின் முடிவை நிறுத்தி வைத்து கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்தின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குனர் குமார் ஜெயின், தற்போதைய தலைமை நிதி அதிகாரி சமீர் பி.எஸ். ராவ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக ஸியோமி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் விரும்பியபடி அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் "மோசமான விளைவுகள்" சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த பகிரங்க குற்றச்சாட்டை அமலாக்கத் துறை முழுமையாக மறுத்துள்ளது. “ஸியோமி நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றது மற்றும் ஆதாரமற்றது. ஸியோமியின் அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாமாக முன்வந்து அமலாக்கத்துறையில் சமர்பித்த அறிக்கைகளை நீக்கினர். குமார் ஜெயின் வாக்குமூலங்களும், சமீர் பி எஸ் ராவின் வாக்குமூலங்களும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிக்கைகளைப் பதிவு செய்யும் போது எந்த நேரத்திலும் அவர்களால் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை” என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.

“நிறுவனத்தின் அதிகாரிகளின் கடைசி அறிக்கை 26.04.2022 அன்று பதிவு செய்யப்பட்டது . பணத்தை பறிமுதல் செய்யும் உத்தரவு 29.04.2022 அன்று வழங்கப்பட்டது. கணிசமான நேரம் கடந்த பிறகு இப்போது கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு காலம் கடந்த பின் சிந்தனை என்று தோன்றுகிறது. குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைகளிலிருந்து அவை வெகு தொலைவில் உள்ளன” என்று அமலாக்கத் துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்கிடையில், அமலாக்கத் துறையின் மறுப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஸியோமி நிறுவனம் “ரிட் மனுவின் உள்ளடக்கங்கள் பொதுவில் இரகசியமானவை. இது அமலாக்கத் துறையில் ஏற்படுத்தும் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமல் ஒருவித பரபரப்பான நிலையை உருவாக்க விரும்புவதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது. இதைப் பற்றி நாங்கள் கருத்து தெரிவிக்க மறுக்கிறோம். எல்லா வகையிலும் எங்கள் உரிமைகளை நாங்கள் வைத்திருக்கிறோம், மேலும் எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளது.