டெக்

வாட்ஸ் அப் பதிவிறக்கம் கட்டாயம் கிடையாது - டெல்லி உயர்நீதிமன்றம்

webteam

வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும். பிற செயலிகளிலும் விதிமுறைகள் இருக்கின்றன. வாட்ஸ் அப்புக்கு எதிராக மட்டும் வழக்கு தொடுத்தது ஏன்?” என கேள்வி எழுப்பியது.

மேலும், இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பிரைவஸி பாலிசியை அண்மையில் மாற்றுவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அதன் சக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்காத பயனர்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியோடு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது வாட்ஸ் அப் நிறுவனம். தொடர்ந்து வாட்ஸ் அப் பயனர்கள் பலரும் அதற்கு குட் பை சொல்லியிருந்தனர். அதையடுத்து பயனர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலம் தன்னிலை விளக்கம் கொடுத்தது வாட்ஸ் அப்.