டெக்

செவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட 'இயர் போன்கள்' - எச்சரிக்கும் வல்லுநர்கள்!

Sinekadhara

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இயர் போன்கள் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டன. ஆனாலும் அவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் செவித்திறன் பறிபோகும் சூழல் உருவாகும் என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

விமானிகள், வானொலி வர்ணனையாளர்கள், தொலை உணர்வு ஊழியர்கள், மாற்று திறனாளிகள் என ஒரு சிலரே பயன்படுத்தி வந்த இயர்போன் தற்போது செல்போன் உபயோகிக்கும் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடக்கும்போது, உறங்கும்போது, உண்ணும்போது என பலரும் காதுகளை இயர்போன்களுக்கு கடன் கொடுத்து சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கல்வி நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்திலும் இயர்போன் தவிர்க்க முடியாத சாதனமாகிவிட்டது.

இது சூழலுக்கேற்ற மாறுதல் என்றாலும்கூட இயர்போன்களை அதிக நேரம் பயன்படுத்தினாலோ, இரைச்சலுடன் தொடர்ந்து கேட்டாலோ காது மண்டலத்தில் உள்ள 13 ஆயிரம் செல்களையும் அது பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இரைச்சல் மற்றும் அதிர்வுகளின் காரணமாக நமது காது சவ்வுகளில் உள்ள கோக்லியா என்கிற பகுதி பாதிக்கப்படுகிறது. மலிவு விலையில் கிடைக்கும் இயர் போன்களினால் காதுகளில் உள்ள நுண்ணிய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் மூளைக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் மன நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் இளைய தலைமுறையினர் 100 கோடி பேர் பாதுகாப்பற்ற கேட்கும் சூழல் காரணமாக காது கேளாமைக்கு ஆளாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இயர்போன் பயன்பட்டால் வரும் காலங்களில் ஐம்புலன்களில் முக்கியமான உறுப்பான காதுகளின் திறன் குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வு அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இதுபற்றி மன நல ஆலோசகர் இளையராஜா கூறுகையில், கல்வி சார்ந்த வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம் இயர்போன்களை பயன்படுத்தலாம்; கேம் விளையாட ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே பயன்படுத்தலாம் என்கிறார்.