உலகின் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அமெரிக்காவும் சீனாவும் போட்டிபோட்டு வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் தொழில் நுட்பங்களுக்குப் போட்டியாக அதைவிட சிறப்பு வாய்ந்த பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உலகில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு உதாரணமாய், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் Chat GPT-ஐ பின்னுக்கு தள்ளி சீனாவின் DeepSeek AI முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் கூகுள் சூப்பர் கணினியைவிட, சிறப்பாகச் செயல்படும் சிறப்புக் கணினியை சீனா உருவாகியுள்ளது. சீனா அறிமுகம் செய்துள்ள ’ஜுச்சோங்ஷி - 3’ என்ற குவாண்டம் கணினி, சூப்பர் கணினிகளின் தொழில்நுட்பத் துறையின் புரட்சியாக கருதப்படுகிறது.
சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யூஎஸ்டிசி) ஆராய்ச்சிக் குழு, 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசரை பயன்படுத்தி ’ஜுச்சோங்ஷி - 3’ என்ற குவாண்டம் கணினியைக் கண்டுபிடுத்துள்ளனர். வியக்கத்தக்க வேகத்தில் இயங்கும் ’ஜுச்சோங்ஷி - 3’, தற்போதைய மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கணினியைவிட 10 ஆயிரம் டிரில்லியன் (10 பவர் 15) வேகத்திலும், கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குவாண்டம் கணினியைவிட 10 லட்சம் மடங்கு வேகமாக இயங்கக்கூடியதாக உள்ளது.
கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகளில் செய்யும் பணிகளை 200 நொடிகளில் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது அதே பணியை சீனாவின் ஜுச்சோங்ஷி கம்ப்யூட்டர் வெறும் 14 வினாடிகளில் செய்து முடிக்கும் திறன் கொண்டது என சீனாவை சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 67 க்யூபிட் சூப்பர் கண்டெக்டிங் ப்ராஸசரை பயன்படுத்தி உலகின் அதிவேக குவாண்டம் கணினியை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்திருந்த நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளனர்.