தனியார் நிறுவனத்தில் மாதம் 1.25 லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த நபர், கார் விபத்தால் வேலை இழந்து சொமாட்டாவில் உணவு டெலிவரி செய்து தனது மகளை மருத்துவத்துக்கு படிக்க வைத்து வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபால் காந்தி என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த சொமாட்டா டெலிவரி நபர் உணவை மட்டுமல்ல, வாழ்க்கைப் பாடத்தையும் எனக்கு சொல்லித் தந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் 1.25 லட்சம் சம்பாதித்துக்கொண்டிருந்தவர். விபத்தால் அவரது உடலின் இடது பக்கம் செயலிழந்தது. இதனால், வேலை போனது. உடல் தேறிய அவர் மனம் தளர்ந்துவிடவில்லை.
சொமாட்டாவில் இணைந்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மகளை மருத்துவம் படிக்க வைக்கிறார். வாழ்க்கைப் பற்றி எந்தப் புகாரும் இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார் இந்த மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.