டெக்

'200 மில்லியன் ஸ்மார்ட் போன்கள்' - அதிரடியாக களம் இறங்கும் ரிலையன்ஸ்.!

Veeramani

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மூலமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 200 மில்லியன் ஸ்மார்ட் போன்களை உற்பத்திசெய்து சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

கூகுள் ஆண்ட்ராய் உதவியுடன் இயங்கும் புதிய ஸ்மார்ட்போன்களை 4 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது ரிலையன்ஸ். இந்திய டெலிகாம் சந்தையை கைப்பற்றும் திட்டத்துடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர் இவர்கள், இதனால் ஏற்கனவே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஜியோமி போன்ற நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, குறைவான விலையில் ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டா பிளான்களை வழங்க திட்டமிட்டுவருகிறார். இதற்காக டிக்ஸான் டெக்னாலஜீஸ் இந்தியா, லாவா இண்டர்நேசனல், கார்பன் மொபைல்ஸ் போன்ற உள்ளூர் உற்பத்தியாளர்கள் உதவியுடன் உற்பத்தியை ஊக்குவித்துவருகிறார். “ நாங்கள் உள்ளூர் நிறுவனங்களை சிறப்பாக கட்டமைக்க முயற்சிக்கிறோம். தொடக்கநிலையில் உள்ள ஸ்மார்ட்போன்களை சிறப்பாக உருவாக்க முயற்சிக்கிறோம். தொழில் செய்யவும், உற்பத்தி செய்யவும் இந்தியாதான் சிறப்பான சந்தை என்று உலகத்திற்கு தெரியும்” என்று இந்தியாவின் செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக் அசோசியேசனின் தலைவர் பங்கஜ் மோகிண்ட்ரோ கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் வரும் இரண்டு ஆண்டுகளில் 150 முதல் 200 மில்லியன் போன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது, இது உள்ளூர் உற்பத்தியாளர்களை பெரிய அளவில் ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் 165 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யவும் திட்டம் வகுத்துள்ளது இந்நிறுவனம்.