நெல்லையில் முன்னாள் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, காவலரை தாக்க முயன்றதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளனர். காலில் காயத்துடன் குற்றவாளியும் படுகாயங்களுடன் காவலரும் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில், விருப்ப ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். நில பிரச்சினை காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உறவினர்கள் புகார் அளித்தனர். ஜாகிர் உசேன் உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், கார்த்திக் மற்றும் அக்பர் ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காவல் துறையினரின் அலட்சியத்தாலேயே ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்டதாக அவரது மகன் இச்சூர் ரகுமான் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். இத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள் என நெல்லை ஆணையர் உறுதி அளித்ததாகவும், அதன்பேரில் உடலை வாங்கிக் கொள்வதாகவும் ஜாகிர் உசேனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தௌஃபிக், ரெட்டியார்பட்டி என்ற இடத்தில் மறைந்து இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவரை அங்கு சென்று பிடிக்க முயற்சித்தபோது, காவல்துறையினரை அவர் தாக்க முயற்சித்ததால், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை பிடித்தனர்.
இந்த சம்பவத்தின்போது, காவலர் ஆனந்த் என்பவரும் படுகாயம் அடைந்தார். உடனடியாக இருவரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெரும் நபர்களை தவிர்த்து மற்ற அனைவரையும் வெளியே அனுப்பி காவலர்களின் கட்டுப்பாட்டிற்குள் மருத்துவமனை கொண்டுவரப்பட்டுள்ளது.
மறுமுனையில், நெல்லை டவுனில் உள்ள ஜாகிர் உசேன் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பின் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, ஜாகிர் உசேன் பிஜிலி வீட்டின் அருகே உள்ள முர்த்தின் ஜஹான் தைக்கா இடத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.