செய்தியாளர்: V M சுப்பையா
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில், பாலாஜி என்பவர் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் விக்னேஷ் என்ற நபர் தனது தாயாருக்கு மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் உடனடியாக கைது செய்யப்பட்ட விக்னேஷ், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விக்னேஷ் தரப்பில், அவரது தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால், ஆத்திரத்தில் குத்திவிட்டதாக வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?” என, காவல் துறையிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, வேலூர் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு, விக்னேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.